புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணிமனையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அப்போது உடனடியாக போனஸ் வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனிடையே புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.








