ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சடங்கில், அவர்கள் பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ளது குமரய்யா கோயில். இங்குள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கையான மும்தாஜ் தலைமையில், பெரிய வீடு பால் ஊற்றும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருநங்கையாக மாறிய மூன்று பெண்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த விழாவை கொண்டாடும் வகையில் மூன்று திருநங்கைகளுக்கும், மணப்பெண் கோலத்தில் அலங்காரம் செய்து சடங்கு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு சென்னை, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட சுமார் 42 மாவட்டங்களைச் சார்ந்த திருநங்கைகள் மற்றும் திருநங்கைகள் தலைவிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வை திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்ப விழாவாக நடத்தினர். இதில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள், அவரவர் மாவட்டத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பணம் மொய் வரவு செய்தனர்.
இதனை தொடர்ந்து தங்கள் மாவட்டத்தின் சார்பில் விருப்பத்தின் பேரில் பணம் நன்கொடையாக கொண்டு வந்து ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் ஆசிர்வாதம் செய்தனர். இதில் மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநங்கைகளுக்கு பணம் மழையை குவித்தனர். எங்கு பார்த்தாலும் 500, 200, 100, 50, 20, 10 என பணம் மழையை குவித்து ஆசீர்வாதம் செய்தனர். இந்த விழாவானது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இதில் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதை காண வந்த பார்வையாளர்கள் பரவசமடைந்தனர். அதனை
தொடர்ந்து சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டது. திருநங்கைகளின் ஆர்ப்பரிக்கும் குத்தாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்று பார்வையாளர்களை அசத்தியது.
திருநங்கைகளாக மாறுபவர்களுக்கு இது போன்ற சிறப்பு சடங்கு பால் ஊற்றும் விழா எடுப்பது திருநங்கைகளின் வழக்கமாம். திருநங்கைகள் ஒன்று கூடி, மேளதாளங்கள் முழங்க, மூன்று திருநங்கைகளுக்கு மனக்கோலம் ஆடை ஆபரணங்கள் உடுத்தி விழா எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது. எங்கு பார்த்தாலும் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து ஆசீர்வாதம் செய்த நிகழ்வு, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பல வண்ண வண்ண ஆடைகள் ஆபரணங்கள் உடுத்தி தமிழகம் முழுவதும் இருந்தது வந்த திருநங்கைகள் ஒரே இடத்தில் விழாவில் கலந்து கொண்டது அவர்களின் ஒற்றுமையை பறைசாட்டியது.
- பி.ஜேம்ஸ் லிசா