தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம் 

ஆந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் யெகொல்லு வெங்கட சதீஷ். இவர் கூடுர் பகுதியிலுள்ள ஒரு தனியார்…

ஆந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் யெகொல்லு வெங்கட சதீஷ். இவர் கூடுர் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சதீஷ் வழக்கம் போல் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் வழக்கம் போல் செய்யும் சோதனையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது மாணவன் சதீஷ் தன் மார்பை பிடித்து கொண்டே நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவனை அருகில் அமர வைத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் மாணவன் மூச்சு விடுவதற்கு சிரமமப்பட்டதை தொடர்ந்து போலீசார் தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மருத்துவனைக்கு சென்றனர்.மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

12ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.