உத்தரபிரதேசத்தை சேர்ந்த, போக்குவரத்து காவலர், தீப்பற்றிய காரில் சிக்கிய 3 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இவர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கிய கார் வெடித்து சிதரியது.
உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்திலிருந்து, பிஜ்னோர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் உள்ள தேசியச் சாலையில் எதிரெதிராக வந்த இரு கார்கள் மோதின. இந்த சம்பவம் இரவு 9.30 மணிக்கு நடந்தது. அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் அருண் குமார், காரில் சிக்கியவர்களை காப்பாற்றினார். முதலில் காரில் இருக்கும் இரண்டு ஆண்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்தார். இதைத்தொடர்ந்து காரின் கதவை திறந்து காரின் பின்புற இருக்கையில் இருந்த 60 வயது பெண்ணை காப்பாற்றினார். இந்த சமயத்தில் கார் தீப்பற்றத் தொடங்கி, வெடித்து சிதறியது. இதனால் காவலர் அருண் குமாரும், விபத்தில் சிக்கிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நால்வரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் மொஹமத் ஆசிப் (35), மொஹமத் அம்சத் , சஹானா (62) ஆகியோர் என்றும் ஹூண்டாய் வெர்னா என்ற கார் இவர்கள் வந்த கார் மீது வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது உயிரையும் பொருட்படுத்தாது, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிய அருண்குமாருக்கு ரூ. 10.000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று எஸ்ஐ ராம் ஆனந்த் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.







