சென்னையில் இன்று இரவு (திங்கட்கிழமை) 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
அதன்படி ஈகா சந்திப்பில் இருந்து சென்டிரல் நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து, இடதுபுறம் திரும்பி பிளவர்ஸ் சாலை வழியாக போக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக தடை இல்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.
-இரா.நம்பிராஜன்








