ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளிப்பது, படகு சவாரியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறு வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்தனார்.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே ஒகேனக்கலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







