தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையாமலும் அதிகமாக பாதிப்பு பதிவாகும் மாநிலங்களில் மூன்றாவது இடத்திலும் இருப்பதால் தேர்தலை நடத்துவது சற்று சிரமமானது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்றும், தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவைப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.








