EVM மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறி, மின்னணு வாக்குப்பதிவு விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 2024 தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடக்கும் குளறுபடிகள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 அரசியல்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின்
நம்பகத்தன்மை குறித்து பெரிய அளவில் விவாதிக்க பட்டதோடு, ஒத்த எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளுடனும் பரந்த ஒருமித்த கருத்தை உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்து செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் 14-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும்
செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்த நிலையில், கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிவிக்கும் விதமாக, EVM மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “வாக்குப்பதிவு
இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் எனது கட்சிக்கும் எனக்கும் வித்தியாசமான பார்வை இருக்கலாம். கட்சிக்காக என்னால் பேச முடியாது, ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நான் நம்புகிறேன். இதை துவக்கத்தில் இருந்தே வலியுறுத்தியும் வருகிறேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.”
என தெரிவித்துள்ளார். EVM விவகாரத்தில் தொடந்து தனது எதிர்ப்பினை காங்கிரஸ் பதிவு செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா









