பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மன் கி பாத் உரை மூலமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான மனதின் குரல் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 98-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். இது இந்த ஆண்டில் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை தொடங்கியதாக தெரிவித்தார்.
மேலும், உலகின் பல நாடுகள் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமை தினத்தில் நடந்த 3 போட்டிகளில் 700 மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், பொது மக்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும். அதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். இதுதவிர தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஹரியானாவில் இளைஞர்கள் சிலர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி துப்புரவு பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒடிசாவை சேர்ந்த கமலா மோகரனா என்பவர் நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர், பால் பாக்கெட் கவர்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி மறுசுழற்சி முறையில் கூடைகள் மற்றும் செல்போன் ஸ்டாண்ட் போன்ற பொருட்களை செய்வதாகவும் குறிப்பிட்ட பிரதமர், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா