டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் இன்று தொடங்குகின்றது.   உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்…

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் இன்று தொடங்குகின்றது.

 

உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து இன்று பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

இன்று தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக்கில் 163 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 537 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மொத்தம் 22 விளையாட்டுகளில் 539 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உலக சாதனையாளர்கள் சந்தீப் சவுத்ரி, சுமித் ஆகியோரும் தடகள அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் வினோத்குமார், தேக்சந்த், ஜெய்தீப், சகினா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.