இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. இதையடுத்து பாஜக கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் இருவரும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த பின் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.