தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடனான ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடபெற்ற நிலையில், ஊரங்கு தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







