கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக மே 5ஆம் தேதி முதல் இயக்கப்படாமல் இருந்த குளிர்சாதன பேருந்துகள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மீண்டும் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பேருந்து சேவையை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்துப் பேருந்துகளிலும் சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







