தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடர்பான முடிவு அரசின் கொள்கை முடிவு என்றும், அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அப்படி கொண்டுவரப்பட்டால் பள்ளிக்கட்டணம் செலுத்த சிரமத்திற்குள்ளாகும் பலரும் பயனடைவார்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.







