காதல் முறிவை கடிதத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இளைஞரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காதலை வெளிப்படுத்த பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர் காதலர்கள். தனது காதலன் அல்லது காதலியிடம் காதலைத் தெரிவிக்கும் தருணத்தை, அந்த நாளை ஸ்பெஷலாக மாற்ற வேண்டும் என எண்ணி வித்தியாசமான வழிகளில் காதலை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில், 90’s கிட்ஸ்கள் கிரீட்டிங் கார்ட்ஸ், லெட்டரின் மூலம் காதலைத் தெரிவித்து வந்தனர். காதலைச் சொல்ல லெட்டர் கொடுத்த காலம் மாறி, தற்போது காதலை முறிக்க ஒருவர் லெட்டர் கொடுத்த சம்பவம் வைரலாகி உள்ளது.
காதலை இனி தொடர முடியாது என காதலி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு, அவரது காதலன் கடிதம் எழுதி அதில் கையெழுத்துப் போட்டு தருமாறு கூறி வாட்ஸ்அப்பில் காதல் முறிவுக்கான லெட்டரின் பிடிஎஃப் ஒன்றை அனுப்பியுள்ளார். அதற்கு காதலியும் சரி எனக் குறிப்பிட்டு, டிஜிட்டல் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். இதையடுத்து, அப்பெண்ணின் காதலர் அந்த லெட்டரையும், வாட்ஸ்அப் சாட்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், இது அதிகாரப்பூர்வமான காதல் முறிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், காதலி பன்சாலுக்கு காதலன் வெலின் எழுதியுள்ளதாவது, ”உன் உடல்நிலை நன்றாக உள்ளது என நம்புகிறேன். என்னை காயப்படுத்திய நிகழ்வை நினைவூட்டவும் விரும்புகிறேன். சமீபகாலமாக நாம் நமது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்னுடைய இந்த முடிவு உன்னில் எந்தவிதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடாது. நீ அழகான பெண். ஆனால் எனக்கு கிடைத்த சில தகவல்கள் என்னை இப்படி யோசிக்க வைத்துள்ளது. நமது உறவின்மேல் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. என்னுடைய நலவிரும்பிகளின் உணர்வை மதித்தாக வேண்டும்.
இந்த முடிவை நான் எடுத்தது அவ்வளவு சுலபமானதில்லை என உனக்குத் தெரியும். ஆனால், நான் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். என்னுடைய இந்த முடிவை நீ மதிப்பாய் என நம்புகிறேன். உனக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








