தமிழக முதலமைச்சராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்க இருக்கிறது. நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற திமுக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் ஒருமனதாக, சட்டமன்ற திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்தனர். சட்டமன்ற தி.மு.க. தலைவராக, எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்துடன் இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பட்டீல், பதவியேற்பு விழா குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, நாளை மறுதினம், காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.