ஈரோடு கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரான பழனிசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று உயிரிழந்தார்.
தந்தையின் சடலத்தை பெறுவதற்காக மணிகண்டன் தமது உறவினர்களுடன் வந்துள்ளார்.
பின்னர், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பேக்கிங் செய்யும் உபகரணங்களையும், உடலை மின் மாயானத்தில் எரியூட்டுவதற்கான விண்ணப்பத்தையும் மணிகண்டன் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

ஆனால் உடலை பேக்கிங் செய்யாமல் மருத்துவர்கள் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாலையில் வந்த அதிகாரிகள் மணிகண்டனிடம், தந்தையின் உடலை எடுத்துச் செல்ல இலவச அவசர ஊர்தி கிடைக்க வில்லை என்றும் அதனால் தனியார் அவசர ஊர்தியை ஏற்பாடு செய்வதற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
மேலும், உடலை பேக்கிங் செய்ய கட்டணமாக 8 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், மின்மயானத்தில் உடலை எரியூட்ட 9 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் இலவச அமரர் ஊர்த்தியை ஏற்பாடு செய்து பழனிசாமியின் உடலை எரியூட்ட ஏற்பாடு செய்தனர்.







