‘ஒன்றிய’ என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை எந்த நோக்கத்திற்காக, இனத்திற்காக சொல்கிறது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றமாக நினைக்க வேண்டாம் என்றும், சட்டத்தில் சொல்லப்பட்டதையே தாம் சொல்வதாக கூறினார்.
மேலும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததுதான் ஒன்றியம் எனவும், 1957-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், ஒன்றிய என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய என்ற வார்த்தை கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பதால் அதனை பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தமாக தெரிவித்துள்ளார்
நீட்தேர்வில் விதிவிலக்கு பெறுவதுதான் திமுக, அதிமுகவின் உணர்வு எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு பெற தாங்கள் குரல் கொடுப்பீர்களா என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு கேள்வி எழுப்பினார்.







