தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு கொள்கை, காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது என தெரிவித்தார். வெவ்வேறு சமூகங்களின் பின் தங்கிய நிலையை நிர்ணயிப்பதில் மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை, இந்த அரசு உறுதி செய்யும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகள் நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 லட்சம் ரூபாயிலிருந்து, 25 லட்சமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என குறிப்பிட்டார். அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள், சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும் என தெரிவித்தார்.







