திருப்பூரில் தமிழ் இளைஞர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக 2 வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன்
நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் கைகலப்பு நடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகளும் இது குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டன.
இந்த நிலையில் திருப்பூர் சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு “திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்சனை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. எனவே இதுகுறித்து யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.
திருப்பூரில் சம்பவத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பீகாரை சேர்ந்த ரஜட்குமார் மற்றும் பரேஷ்ராம் ஆகியோர் ஆவர். இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட சிலரை திருப்பூர் மாநகர போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்களை கண்கானிக்க தனிப்படை அமைத்துள்ளதாக திருப்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
– யாழன்







