ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகின் மிக பணக்கார கடவுளான ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல்வேறு பிரபலங்கள் அடிக்கடி இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு குறும்படம் ஒன்றிற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இசையமைப்பாளரும், தனது தந்தையுமான தேவாவுடன் வந்திருந்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலமாக தரிசனம் செய்த அவர்கள் பின்னர் ரங்கநாயகர் மண்டபத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கினர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மூலமாக சிறப்பாக தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தனர்.







