காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் ஒரே நேரத்தில் தொடர்ந்து சென்ற 5 தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’தியாகேசா தியாகேசா’ என்ற முழுக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்கால் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா, கடந்த மாதம் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை ஒட்டி நேற்று செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையை தொடர்ந்து, செண்பக தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா, கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து ’தியாகேசா தியாகேசா’ என்று முழக்கமிட்டு இழுத்தனர். ஒரே நேரத்தில் 5 திருத்தேர்கள் சென்றதால் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் ஆர்வத்துடன் தேர்களை இழுத்து சென்றனர்.
தொடர்ந்து, நாளை இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.







