திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி புகழ்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காந்திமதி அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், மஞ்சள், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு மகா தீபாரனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
மேற்கொண்டனர்.
இந்த திருவிழாவை ஒட்டி தினந்தோறும் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 10 நாள் திருவிழாவாக காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழரத வீதி, தெற்கு ரத வீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலையில் திருக்கோவிலில் சேரும் நிகழ்ச்சியும் நடைபெறும். வருகின்ற 22 ஆம் தேதி 11ம் நாள் திருவிழாவாக சுவாமிக்கு அம்பாள் காட்சி
கொடுக்கும் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 12ம் நாள் திருவிழாவாக 23ம் தேதி அதிகாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதன் பிறகு சாமியும் அம்பாளும் பட்டின பிரதேசம் நடைபெறும். இதைத் தொடர்ந்து 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல் திருவிழாவும், 26 ஆம் தேதி சாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறு வீடு பட்டினப்பிரதேசமும் வீதி உலாவும் நடைபெற உள்ளது.







