மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் ரூ.600 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் மற்றும் அரசின் துறை செயலாளர்கள், நடுத்தர தொழில் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநாட்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிப்பருவத்திலேயே மாணவர்கள் புத்தாக்க சித்தனையுடன் உருவாக்கிட “பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” எனும் புதிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு, நடுத்தர தொழில்களும் வளர வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் என கூறினார். சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ப்பிலும் முன்னணியில் உள்ளது. மதுரையில் இயங்கி வரும் 50,000 குறு சிறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை, இந்த பொருட்களுக்கு வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளதால் தொழில் நிறுவனங்கள் இதை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.
நாட்டில் எளிமையான தொழில் புரிவோர் பட்டியலில் தமிழ்நாடு 14 வது இடத்தில் இருந்து 3 வது இடத்தை பிடித்துள்ளது, விரைவில் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 2030 ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் இலக்கை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மதுரையில் தகவல் தொழில் நுட்ப டைடல் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் 2 கட்டங்களாக 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா கட்டப்பபடும் என்றார். தலா 5 ஏக்கர் என மொத்தமாக 10 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கப்படும். டைடல் பூங்காவினால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்