குழந்தையை கடத்தப் போவதாக பணம் கேட்டு மிரட்டல்: இளைஞரை கைது செய்த காவல்துறை!

காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மனைவி மற்றும் இரண்டு…

காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நெசவுத் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்திக்கு சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனை விளையாட்டாக நினைத்த சுந்தரமூர்த்தி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் மறுநாள் அதே நேரத்தில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியின் இரு குழந்தைகளையும் கடத்தி கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சம் அடைந்த அவர், செல்போன் அழைப்பு மிரட்டல் குறித்து சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தார். செல்போன் அழைபபை ஆய்வு செய்த போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த சபரிஷ் என்பதும், அவரின் குடும்பத்தினர் உயர் பதவியில் உள்ளதும் தெரியவந்தது.

பண தேவைக்காக விளையாட்டாக செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ் அப் டிபி புகைப்படத்தை வைத்து செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.