பிரதமருக்கான உரிய மரியாதையை இந்த அரசு எப்பொழுதும் வழங்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். மேலும், ஒவ்வொரு வீட்டில் உள்ள பிள்ளைகளும் +2 தேர்ச்சி பெற வேண்டும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனப் பெற்றோர்களின் வறுமையும் கஷ்டத்தையும் அறிந்த மாணவர்கள் தாங்க மனம் இல்லாமல் தவறான முடிவை எடுப்பதா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரும்பாலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் இதுபோன்ற தவறான முடிவை எடுப்பதாகவும், பொதுவாகப் பெற்றோர்கள் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என நினைப்பார்களே தவிர மருத்துவராக பொறியாளராக வேண்டும் எனப் பெற்றோர்கள் ஆசைப்படுவதில்லை என்பதனை மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும், மத்திய, மாநில அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மின் கட்டணம் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜிஎஸ்டி-ஐ அதிகரித்தது குறித்து விவாதம் செய்வதற்கு அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்வரத் தயாராக இல்லை எனவும், மின் கட்டண உயர்வு குறித்தான அறிவிப்பு வரட்டும் நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.
அப்போது செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி புகைப்படத்தின் மேல் கருப்பு மை பூசியவர் மட்டும் கைது செய்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இது எங்காவது ஒரு இடத்தில் நடந்திருக்கும், பிரதமருக்கான உரிய மரியாதையை இந்த அரசு எப்பொழுதும் வழங்குகிறது எனவும், அதனை முதலமைச்சர் சரியாகச் செய்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து நேஷனல் ஹெராய்ட் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பழிவாங்கும் மனப்பான்மையோடு செய்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.








