தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமரிசையாக இன்று தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது மகாலிங்க சுவாமி திருக்கோயில். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இத்திருக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடம் பெற்ற தலமாகவும் பார்க்கப்படுகிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னன் இக்கோயிலில் இருக்கும் காருண்யா அமிர்த தீர்த்தத்தில் நீராடி மகாலிங்க பெருமானினை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டதாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி அம்பாள் சிறப்பு ஊர்வலங்களும் நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வான பஞ்சரத திரு தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.
சுமார் 500 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருள விநாயகர் தேர், முருகன் தேர், பிரகத் சுந்தர குஜாம்பிகை தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்கள் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்கிட, ஓதுவா மூர்த்திகள் தேவார திருவாசக பதிகங்களுடன் சிவ வாத்தியங்கள் இசைத்திட, இடை மருதா… மகாலிங்கா… என பக்தர்களின் கோஷத்துடன் தேரோட்ட பெருவிழா தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து வழிபாடு செய்தனர். திரு தேரோட்ட பெருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் திருவிடைமருதூர் பேரூராட்சி சார்பில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்சார துறை உள்ளிட்ட ஏராளமான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு மாற்று மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா