திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று இரண்டாவது நாளாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபக்கமும் நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் அவர்களை பார்த்து கைகளை காட்டினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே இந்த வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், கேரள ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







