திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை வீட்டுக்குள் வைத்து அப்பகுதி பொதுமக்கள் பூட்டினர்.
திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள கனகவல்லிபுரம் தெருவில் வசித்து வருபவர் 75 வயதான கிருபாகரன். இவரது மூத்த மகன் தாமோதரன் மற்றும் இளைய மகன் அனு ஆகியோர் மேல் தளங்களில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கிருபாகரன் அருகே உள்ள கடைக்கு சென்ற போது, கீழ் தளத்தில் இருந்து ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருக்கும் பெண்கள் கீழே வந்து பார்த்து பயந்து வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கிருபாகரன் வீட்டில் இரு பக்கங்களிலும் கிராம மக்கள் சூழ்ந்து இரு கதவுகளையும் மூடி தாழிட்டுள்ளனர். இதையடுத்து மூத்த மகன் தாமோதரன் மற்றும் இளைய மகன் அணு ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, இருவரும் வந்து பார்த்தபோது கொள்ளையன் ஒருவன் உள்ளே இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர், வெளியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே சென்று அனைத்து அறைகளையும் ஆய்வு செய்த போது, அறையில் பதுங்கி இருந்த கொள்ளையனை பிடித்தனர்.
மேலும் போலீசார் கொள்ளையனிடம் விசாரணை செய்ததில், சென்னை கிண்டி ஆலாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்கின்ற அரவிந்த் குமார் என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினின் வெளி வந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கீழ் தளத்திலிருந்த முதியவர் கிருபாகரன் அருகே உள்ள கடைக்கு சென்று இருந்ததால் வீட்டில் புகுந்த திருடன் அவரைத் தாக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்டப்பகலில் மேல் தளத்தில் ஆட்கள் இருக்கும் போதே கடப்பாரையுடன் வீட்டுக்குள் புகுந்த திருடனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.