நடிப்புக்கு மொழி தடை கிடையாது- ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.  தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில், இயக்குனர் கின்ஸ்லின் இயக்கியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா.…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. 

தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில், இயக்குனர் கின்ஸ்லின் இயக்கியுள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. இவர் ஏற்கனவே வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி, எடிட்டர் ராமர், இயக்குனர் கின்ஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கனாவுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் எனது படம் டிரைவர் ஜமுனா. கனா, க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பிறகு பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி வரும் படங்களில் நடிக்க வேண்டாம் என்று‌ முடிவெடுத்தேன். ஆனால் இக்கதை என்னை நடிக்க தூண்டியது. கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது. பல்வேறு தடைகளை கடந்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறிய படங்கள் வெளியாவது குறைந்து விட்டது. இப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் கார் சண்டை எல்லாவற்றையும் நானே செய்துள்ளேன் எனப் பேசினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார். நான் அப்படி ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான்‌ நானாகத்தான் இருக்கிறேன். அடுத்த நயன்தாரா நான் கிடையாது எனக் கூறினார். மேலும் தெலுங்கில் நடித்தாலும் தமிழ் சினிமாவுக்கு தான் எனது முக்கியத்துவம் இருக்கும் எனவும், நடிப்புக்கு மொழி தடை கிடையாது எனவும் பேசினார்.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.