திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்தை மதிமுக நிராகரிப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து அவருக்கு கடிதங்கள் எழுதியதாக குறிப்பிட்ட துரைசாமி, அந்த கடிதங்களுக்கு பதில் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் பேச்சை நம்பி மதிமுக உறுப்பினர்கள் வாழ்க்கையை இழந்துள்ளதாக குறிப்பிட்ட துரைசாமி, இனியும் அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சிறந்தது என்றும் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை…..
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். இரண்டு வருடத்திற்கு கட்சிக்கு வராமல் தற்பொழுது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றால், அது எந்த நோக்கத்துடன் இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மதிமுக கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். நிராகரிக்கிறோம். எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக, ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் வைகோ தெரிவித்தார்.