‘இபிஎஸ் டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது’ – அறப்போர் இயக்கம்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2016-21ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-21ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தது.

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த தமிழ்நாடு பொதுப் பணித்துறைக்குப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!’

அதில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டது அவதூறு இல்லை எனவும், அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் எதேச்சதிகார போக்கும், ஒரு தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகார் அளித்ததற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உட்படப் பல உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மான நஷ்ட ஈடுக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பதில் மனுவிற்குப் பதிலளிக்கக் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.