தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தங்களை மிரட்டி வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவரையும் நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுமதித்த
நிலையில், ஒரு வயதான பெண்மணி ஒருவர் மாற்றுத்திறனாளி ஒருவரை அழைத்துக் கொண்டு வருகை தந்தார்.
அப்பொழுது, அவரை போலீசார் சோதனை செய்தபோது அந்த பெண்மணி வைத்திருந்த பையில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது. அதை பார்த்த காவலர் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அந்த பெண்மணி புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பதும், அவருக்கு கண்பார்வையற்ற கணவரும், மாற்றுதிறனாளி மகன் ஒருவரும் உள்ள சூழலில், பாஜக பிரமுகர்கள் சிலர் தங்களை மிரட்டி தாங்கள் 27 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் வீட்டை காலி செய்ய கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால், காசநோய் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்த தனது கணவரும், மாற்றுத்திறனாளியான மகனும் இருக்க இடமில்லாமல் தெருவிற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவ வாய்ப்புள்ளதாகவும், ஆகவே இது தொடர்பான பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து, செண்பகவல்லி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த நிலையில், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
ரெ.வீரம்மாதேவி







