மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கவுள்ளது.
பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. இதனையடுத்து விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், மாடுபிடி வீரர்களுக்கான சோதனை மையம் என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடு பிடி வீரர்களும், 700-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 200 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்பு உடன் காலை 8 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது. போட்டி முறைகேடுகளை தவிர்க்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மது அறுந்தியுள்ளனரா என்பன உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர். மாடுகள் உடலில் எண்ணெய், இரசாயன பவுடர் தடவப்பட்டுள்ளனவா, கண், மூக்கில் பொடி தூவப்பட்டு உள்ளனவா என்பன போன்ற பரிசோதனைகள் செய்த பின்னர் அனுமதிக்கப்படும். போட்டி முடிந்து வெளியே வரும் காளைகளின் உடல் பரிசோதனையும் இந்தாண்டு முதல் நடைபெறுகிறது.
காளைகள் பரிசோதனை செய்யும் இடம் முதல் மாடுகள் வெளியேறும் பகுதி வரை 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மரக்கட்டைகள் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவ மையத்தில் 10 மருத்துவ குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடை துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனை குழுவின் மேற்பார்வையில் போட்டி நடைபெறும் கமிட்டி தொடர்பாக இரு தரப்பினர் இடையே நிலவும் முன்விரோதத்தின் காரணமாக சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு அவனியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம் ஆகியவற்றை இன்று அடைக்க ஆட்சியர் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு குறைந்தபட்ச பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் மொத்தம் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படுகிறது.