வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டியதைடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது.இதில் அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும் போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.5 அடியை எட்டும் போது இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.அணையின் நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த முடிவு செய்திருந்ததால் ஆகஸ்ட் 3ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டிய போது உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 4000 கன அடி வரை நீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 66 அடிவரை சென்ற நிலையில்,நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததாலும்,முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அணையின் நீர்மட்டம் மீண்டும் 70 அடி எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.08 அடியாகவும், நீர் இருப்பு 5846 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1515 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 769 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இம்முறை அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த முடிவு செய்திருப்பதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. இருந்த போதிலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டி உள்ளதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.