பேரறிவாளன் விடுதலை அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி

பேரறிவாளன் விடுதலை முழுக்க முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 ஆண்டு காலமாக…

பேரறிவாளன் விடுதலை முழுக்க முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

மேலும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் படி பேரறிவாளனையும், அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும், மற்ற 6 பேரையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என்று கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

https://twitter.com/OfficeOfOPS/status/1526855164547637248

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க, முழுக்க அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் என்பதையும் இந்த தருணத்தில் நாங்கள் எடுத்துக்கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

பேரறிவாளனை உடனே விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், மேற்படி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.