கோவை செல்வபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தாஜுதீன் என்பவருக்கு சொந்தமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்று உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தங்கியிருந்த வீடு பழுதடைந்ததை அடுத்து அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது 10 வயது மகன் முஹம்மது ஃபாசில் மாலை பழுதடைந்த வீடு இருக்க கூடிய பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து அந்த வீட்டின் உள்பகுதியில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க சிறுவன் உள்ளே சென்ற நிலையில் முன்னரே பெய்திருந்த கனமழையால் ஊறி இருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து சிறுவனின் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சிறுவனின் அழுகுரலை கேட்டு விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனை அனுமதித்தனர்.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர மேயர் கல்பனா மற்றும் மாநகர ஆணையர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்த்து சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து துரிதமாக சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் சிறுவனது பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.
குடியிருப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும் அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தும் முறையாக அப்புறப்படுத்தப்படாததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மழைக்காலம் துவங்க உள்ள சூழலில் இதுபோன்ற பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
-ரெ.வீரம்மாதேவி







