மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடத்தில் இரும்பு திருட வந்த நபர்கள் பீர் பாட்டிலால் மேஸ்திரியை குத்திவிட்டு, போலீஸ் பூத்தை உடைத்து சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாம்பலம் ஜி.என் செட்டி சாலையில் மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆட்டோவில் வந்த சில நபர்கள் இரும்பு கம்பியை திருட வந்துள்ளனர். அப்போது இதை கண்ட மேஸ்திரி லோகநாதன் இரும்பு திருட வந்த நபர்களிடம் வாக்குவாதம் செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மேஸ்திரி லோகநாதனை கை மற்றும் காலில் குத்தியதில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்கள் அருகிலிருந்த பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறைக்கு சொந்தமான பூத்தை கல்லால் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த மேஸ்திரி லோகநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேஸ்திரி லோகநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







