“காயிதேமில்லத் பெயரில் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும்” – திருமாவளவன்!

காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஜூன் 5. கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

கண்ணியத்தமிழர் காயிதேமில்லத் அவர்கள் இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர். மேலவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றியவர். அதன்மூலம் தேசியத் தலைவராக உயர்ந்தவர்.

இஸ்லாம் எனது மதம்: தமிழ் எனது தாய்மொழி என முழங்கிய காயிதேமில்லத் அவர்கள் அன்னைதமிழ் மீதும் ஆருயிர்த் தமிழினத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இசுலாமியர்களுக்கும் இன்னபிற சமூகத்தினருக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்தவர். தமிழ்நாடு இன்று மதவெறி அரசியலுக்கு இடம்கொடுக்காத ஒரு சகோரத்துவ மண்ணாக விளங்குவதற்கு அவருடைய முதிர்ச்சிநிறைந்த பக்குவமான அரசியல் அணுகுமுறைகள் குறிப்பிடத்தகுந்த காரணமாகும். அத்தகைய மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின் மகத்தானப் பங்களிப்பைப் போற்றும் வகையில்தமிழ்நாடு அரசு அவரது பெயரில் விருது வழங்கிட முன்வரவேண்டுமென அவரது பிறந்தநாளான இந்நாளில் வேண்டுகோள் விடுக்கிறோம்!

ஏற்கனவே தமிழ்நாடு அரசு கலை, இலக்கியம் சமூகம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளுக்கு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்த்தென்றல் திருவிக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அதுபோல, சமூகநல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும் களமாடிய ஒப்பற்றத் தலைவர் காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.