ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் பழகிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (வயது 6) மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் தனது மகன் சஸ்வின் வைபவை நீச்சல் பழகுவதற்காக அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவன் நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட நந்தகுமார் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நீச்சல்குளம் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கி வந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் குன்றத்தூர் வட்டாட்சியர் நாராயண் மற்றும் கிராம அலுவலர் வீரராகவன் தலைமையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கபட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா