சீர்காழி அருகே கடல்நீர் உட்புகுந்ததை ஆய்வு செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் கடல் அலையில் சிக்கி படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன்
காணப்படுகிறது. அலை எழுச்சியின் காரணமாக நான்கு கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி தாலுக்கா மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் , புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் ஆகியோர் சென்றனர்.
அப்போது கடற்கரையோரம் ஆய்வு மேற்கொண்ட போது கடல் சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட அலையில் அடித்து வந்த மரக்கட்டை மோதி மூர்த்தி மற்றும் விஏஓ பவளச்சந்திரன் காயமடைந்தனர். இதில் விஏஓ பவளசத்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் மடவாமேடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.







