செயல்பாட்டில் இல்லாத 150 கோடி ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு என பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்கை’ பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
Twitter will soon start freeing the name space of 1.5 billion accounts
— Elon Musk (@elonmusk) December 9, 2022
இந்நிலையில் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதாவது பல வருடங்களாக ட்வீட் அல்லது ட்விட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.







