உடல்நலக் குறைவால் உயிரிழந்த வயதான தாயின் உடலை ட்ரமில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம். அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தாய் செண்பகத்தை காணவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் தாய் குறித்து சுரேஷிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ட்ரமில் இருந்த 86 வயதான மூதாட்டியின் உடலை, ட்ரமில் இருந்து எடுக்க முயன்றனர். எடுக்க முடியாத காரணத்தால், ட்ரம் உடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து காவலர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் உடலை ட்ரம்மில் மூடி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







