40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோயில் மேற்கு கோபுர வாசல்!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் சென்று வர திறந்து வைத்தார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் சென்று வர திறந்து வைத்தார்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற
உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சட்டைநாதர் சுவாமி கோயிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில்
மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்ட நிலையில் மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம்
ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்
மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை,ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன. அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர் . 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு திறக்கப்பட்டது
சீர்காழி பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் கும்பாபிஷேக யாகசாலை பணிக்காக மேற்கு கோபுர வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் பள்ளம் வெட்டிய போது சுவாமி ஐம்பொன் சிலைகள் ,தேவாரப் பதிகங்கள்
தாங்கிய செப்பேடுகள் அதிகளவில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.