சினிமாவில் ஆளும் கட்சி தலையீடு-நடிகர் ராதா ரவி பேச்சால் பரபரப்பு

தமிழ் திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினரின் தலையீடு உள்ளது என்பது உண்மைதான் என்று திரைப்பட நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சாமி தரிசனம்…

தமிழ் திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினரின் தலையீடு உள்ளது என்பது உண்மைதான் என்று திரைப்பட நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் ராதாரவி வருகை தந்தார்.பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தபின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவே ஒரு ஆன்மீக நாடு ஆகும். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மாற்றக் கூடாது. பட்டணப் பிரவேசத்துக்கு தடை விதித்த உத்தரவை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. உதாரணத்துக்கு பழனிக் கோயிலுக்கு படிவழியில் செல்லும் பக்தர்களை செல்லக்கூடாது என சொல்ல முடியாது. அதுபோலதான் பாரம்பரிய வழிபாட்டு முறையும். சிதம்பரம் கோயிலை பொறுத்த மட்டிலும் அங்கு அரசு சார்பாக சென்றாலே பிரச்னை தான் எழும். ஆனால் அங்கு எதுவும் செய்ய முடியாது. முதலில் அந்த கோயில் அரசு நிதியை எதிர்பார்த்து இயங்கும் கோயில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஒராண்டு ஆட்சி என்பதை பொறுத்த வரை எதுவும்
சொல்வதற்கில்லை. இந்த அரசால் நான் எதுவும் அனுபவிக்கவில்லை. எனக்கு வேண்டியதை நான் செய்து கொள்வதால் எதுவும் தெரியவில்லை. சினிமாத் துறையில் ஆளும் கட்சி தலையீடு உள்ளது என்பது உண்மைதான்.  அதேவேளையில் தமிழ்
திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்க ஆட்கள் இல்லை என்பதால் பெரிய, பெரிய படங்களை அதிக முதலீடு செய்து அவர்கள் வாங்குகிறார்கள் என்பதும் உண்மைதான்.

தெலுங்கு திரை உலகில் பலர் சேர்ந்து சிண்டிகேட் போட்டு படத்தை வாங்குவதுபோல்
தமிழகத்தில் செய்வதில்லை. தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் முதல் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார்.
முதலில் எதிர்ப்பாக பார்த்தவர்கள் தற்போது நட்புடன் பார்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்: திருப்பதி செல்லும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி

சமீபத்தில் நபிகள் பற்றி சிலர் தவறாக பேசியதை பெரிதாக்குகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியல் நல்லதல்ல. ஹிஜாப் பற்றி வளர்ந்த இஸ்லாமிய நாடுகளில் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. சவூதி அரேபியா, அபுதாபி பெரிய இஸ்லாமிய நாடுகளே முன்பு இந்துக்கள் பொட்டு வைத்தால் அதை அழிக்க சொன்ன காலம் போய் அவர்களே அதை கண்டு கொள்வதில்லை. இருவர் செய்யும் பிரச்னையை இரண்டாயிரம் பேர் செய்ததாக கூறுகின்றனர் என்றார் ராதா ரவி.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.