சென்னையில் போக்குவரத்தை சீர் செய்திட காவல் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும், சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் .
சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டறையின் சேவையை பலப்படுத்தவும், போக்குவரத்தினை சீர் செய்திடவும் சுற்றுக்காவல் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. 2026 வரை போக்குவரத்து நெரிசல் இருக்கலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து வாகனங்களைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.







