2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் செலவின தொகைகள் நிலுவையில் உள்ளதால், அடுத்து வரக்கூடிய தேர்தல் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 30 சதவீத காலி பணிகளை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 கணக்கான அலுவலக உதவியாளர் காலியாக உள்ளதை நிரப்ப வேண்டும் என்றும் துணை ஆட்சியர் பட்டியல் நிரப்பப்படாததால் மக்கள் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் தொகை அடிப்படையில் புதிய கிராமங்கள் புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 15,000 வருவாய்த்துறை அலுவலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும். மேலும் 2021 சட்டமன்ற தேர்தல் செலவின தொகைகள் 20 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளதால் அடுத்து வரக்கூடிய தேர்தல் பணிகளை புறக்கணிக்க உள்ளோம். அடுத்த மாதம் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் இணைக்கும் பணியை முற்றிலுமாக புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நிலையில், தமிழக நிதி அமைச்சரின் கருத்தானது ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் மனதை புண்படுத்தும் படி உள்ளது. இதே நிலை நீடிக்கும் ஆனால் நிதி அமைச்சருக்கு எதிரான தீர்க்கமான முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்