“புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை…

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.  அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இதன் பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தன.  இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பிறகே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  சிங்கப்பூா் நாட்டில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  அங்கு ஒரே வாரத்தில் 26,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து,  பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே நேரடியாக தொழில் வா்த்தக தொடா்புகள் உள்ளன என்பதாலும்,  நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் பயணம் செய்கின்றனா் என்பதாலும் புதிய வகை கரோனா தொற்று தமிழகத்தில் பரவக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது,

“சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் கே.பி.1 மற்றும் கே.பி.2 வகை கொரோனா,  ஒமைக்ரான் ஜெ.என்.1 வகையின் உட்பிரிவுகள் தான்.  தமிழகத்தில் ஜெ.என்.1 வகை பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டது.  எனவே, அதிலிருந்து உருவான புதிய வகை கொரோனா பரவல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதுதொடா்பாக பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை.  அதேவேளையில், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.  அடிக்கடி கைகளை கழுவுவதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும்,  இணைநோயாளிகள் மற்றும் முதியவா்கள் முகக் கவசம் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.