ஆண்டின் முதல் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் மோடி 85 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக உரையாற்றினார்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையாடலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்ததுடன், கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு பணிகள் போன்றவற்றில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகள் குறித்தும் மனம் திறந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வருடத்தின் முதல் மான் கி பாத் நிகழ்ச்சி என்பதாலும், காந்தியின் நினைவுநாள் என்பதாலும் இன்றைய நிகழ்ச்சிக்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு உங்களுடைய கோரிக்கைகளையும் பகிரலாம் என பொதுமக்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி 85 வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சமீபத்தில் பத்ம விருதுகள் மற்றும் விருது பெற்றவர்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், “திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் இளநீர் வியாபாரி தாயம்மாள், தான் வியர்வை சிந்தி உழைத்து சேமித்த ரூ.1 லட்சத்தை தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கியது பாராட்டுக்குரியது. ஒரு நாள் பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் – பெற்றோர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பள்ளியில் வகுப்பறைகள் மோசமான நிலையில் இருப்பதும் நலத்திட்ட உதவிகள் தேவை என்பதையும் தெரிந்துகொண்டார். இந்த பள்ளிக்கு உதவ வேண்டும் என்பதற்காக தினமும் தான் இளநீர் விற்று சேமித்த பணம் ஒரு லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார். தாயம்மாளின் சேவையை பாராட்டுகிறேன். அவரின் இந்த உதவிக்குப் பிறகு பள்ளியானது வளர்ச்சியடைந்துள்ளது. தன் ஏழ்மையிலும் பள்ளிக்கு உதவி செய்த தாயம்மாள் அனைவராலும் பாராட்ட வேண்டியவர். இவரை போலவே தான் எனது எண்ணமும் இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 2047ம் ஆண்டு இந்தியா பாதுகாப்புத்துறையில் வல்லரசாக இருக்க வேண்டும். 2047-ல் நிலவில் இந்தியா பாதுகாப்பு தளம் அமைக்க வேண்டும். செவ்வாயில் மனிதர்களை குடியேற்றம் செய்திருக்க வேண்டும். பூமி சூழலியல் மாசுபடுதலில் இருந்து விடுபட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுருந்தார். இப்ராஹிம் போன்ற தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் இருக்கும் வரை இந்தியாவால் முடியாதது ஏதுமில்லை. இது போன்று அனைவரும் கல்வி, தேச நலன் மற்றும் வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும். கடமையை உணரும் இடத்தில், கடமையே முதன்மையானது இருக்கும். ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. இந்தியா கல்வி மற்றும் அறிவின் புனித பூமியாக இன்றளவும் இருந்து வருகிறது. நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டும் அல்ல. உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்” இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.