அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் உள்ளிட்ட உலக நாடுகளின் பண மதிப்பை கபளீகரம் செய்கிறது அமெரிக்க டாலர். கடந்த 75 ஆண்டுகளில் ரூபாயும், டாலரும் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களாக அதிகபட்ச சரிவை கண்டு வருகிறது. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் 81 ரூபாய் 92 காசுகளாக ரூபாய் மதிப்பு சரிந்தது. இது வரலாறு காணாத வீழ்ச்சியாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூபாயின் வீழ்ச்சிக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து முதலீடுகளை திரும்பப் பெற்றது, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு பின் தொடரும் அதே நிலை, இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு அதிகரிக்கும் செலவு, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி அதிகரிப்பு உள்ளிடவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. டாலரும், அமெரிக்க சந்தையும் வலுவாக மாறியதால் உலக முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்கா பக்கம் திரும்பின. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளின் பண மதிப்பும், சந்தைகளும் ஆட்டம் கண்டன.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்த 1947ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய் 30 காசுகளாக இருந்தது. 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை 4 ரூபாய் 76 காசுகளாகவும், 1982ம் ஆண்டு 9 ரூபாய் 46 காசுகளாக உயர்ந்தது.
1990ம் ஆண்டு 17 ரூபாயாக இருந்தது. இந்தியா உலகமயமாக்கலில் கையெழுத்திட்ட 1992ஆம் ஆண்டில் 25 ரூபாய் 92 காசுகளாக ரூபாயின் மதிப்பு இருந்த நிலையில், 2002ம் ஆண்டு இரட்டிப்பாகி 48 ரூபாய் 62 காசுகளாக இருந்தது.
உலக பொருளாதாரம் சரிவு கண்ட 2007, 2008ம் ஆண்டுகளில் மீண்டும் இந்திய ரூபாய் வலுவடைந்து, 37 ரூபாய் முதல் 43 ரூபாய் வரை நிலைகொண்டது. 2012-ல் 57 ரூபாயாகவும், 2017ம் ஆண்டில் 67 ரூபாயாகவும் இருந்தது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 74 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வரலாற்றில் அதிகபட்ச வீழ்ச்சியாக 82 ரூபாய் வரை சென்று, 81 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.
சில நேரங்களில் சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் அழுத்தங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்ட வரலாறும் உண்டு. கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர் கரன்சிகளை அதிக அளவில் வெளியிட்டு பணமதிப்பு உறுதியாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என தெரியவில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-ரா.தங்கபாண்டியன்